சிறந்த நேரம்

homepage uhren clock for blog

உதவு அல்லது உதவுபவர்களுக்கு வழிவிடு.....

வியாழன், 8 மார்ச், 2012

மகளிர் தினம்


நூறாவது சர்வதேச மகளிர் தினம் இன்று


ர்வதேச மகளிர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, இது நூறாவது சர்வதேச மகளிர் தினமாகும் என்ற வகையில் இன்றைய தினம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு நாடும் நிறுவனங்களும் பல்வேறு தொனிப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை இவ்வருடம் "கல்வி, பயிற்சி மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு : பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி" எனும் தொனிப்பொருளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
ஆனால், 1911 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதியல்ல மார்ச் 19 ஆம் திகதியே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டில், 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஊதியத்தை அதிகரிக்கவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குமாறும் கோரி சுமார் 15000 பெண்கள் பேரணியொன்றை நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.
1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சி பெப்;ரவரி 28 ஆம் திகதியை தேசிய மகளிர் தினமாக பிரகடனப்படுத்தி அமெரிக்கா முழுவதும் கொண்டாடியது. 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் நடந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டின்போது ஜேர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவியான கிளாரா ஸெட்கிட், மகளிர் தினத்தை சர்வதேச ரீதியாக கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதன்படி அடுத்த ஆண்டில் 1911 ஆம்  ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய முதல் தடவையாக நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1848 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலான நாடுகளில் புரட்சி அலை வீசியபோது பிரஷ்யாவின் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பகுதி) மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்த தினம் மார்ச் 19 ஆம் திகதியாகும் என்பதே அது பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது. (மேற்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது வேறு கதை)

நியாயமான ஊதியம், சிறந்த வேலைத் தள சூழல் ஆகியவற்றுக்காக பெண்கள் இத்தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதனிடையே 1911 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 146 பெண்கள் உயிரிழந்தை பெண் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்பான கவனத்தை அதிகரித்திருந்தது.

ஆனால், உலகெங்கும் ஒரே சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஏன் மார்ச் 8 ஆம் தேதி? 

1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் பாரிய வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அக்காலத்தில் ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.

1917 ஆம் ஆண்டு ரஷ்யாவின் பெப்ரவரி புரட்சியின் போது மகளிர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக திரண்ட பெண்கள், ஸார் மன்னருக்கெதிராக போராட்டம் நடத்தி அப்புரட்சியிலும் பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் அவ்வருடம்  முதல் தடவையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஐ.நா. அனுசரணை வழங்க ஆரம்பித்தது.

தற்போது, ரஷ்யா, உக்ரேன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், பெலாரஸ், புர்கினா பெஸோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஸகஸ்தான், மோல்டோவா, மொங்கோலியா, மொன்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் உத்தியோகபூர்வ விடுமுறை தினமாகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சீனா, நேபாளம், மடகஸ்கார் ஆகிய நாடுகளில் இத்தினம் பெண்களுக்கு மாத்திரம்  விடுமுறை  வழங்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை சுகாதாரம் கல்வி போன்ற துறைகளில் பெண்களுக்கான சமத்துவ  இலக்கை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்திருந்தாலும் பெண்களுக்கு சமத்துவ வாய்ப்புகள் வழங்கலாக அது பரிமாற்றப்படவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளியிடப்பட்ட 'புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகள்' முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இலங்கையில் பல துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவமின்மை நிலவுவதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தொழிலாளர் படையைப் பொறுத்தவரை இலங்கையில் பாலின சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. இவ்விடயத்தில் அதிக இடைவெளி கொண்ட நாடுகளில் இலங்கை 20 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புள்ளி;விபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் தொழிலாளர் படையல் 29.8 சதவீதம் மாத்திரமே பெண்களாகும்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்குபற்றல் தொடர்ந்துதம் குறைவாக (5.7 சதவீதம்) இருப்பதை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ரீதியில் பத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே பெண்கள் அரச தலைவர்களாக உள்ளனர். பெண்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் உயர்மட்ட வர்த்தகம், கைத்தொழில் துறைகளில் தீர்மானம் மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் குறைந்தளவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வருட சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக விடுத்த செய்தியில் 'பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது.

                                                                                                                                                                                  - (ஆர். சேதுராமன்)

கருத்துகள் இல்லை: