சிறந்த நேரம்

homepage uhren clock for blog

உதவு அல்லது உதவுபவர்களுக்கு வழிவிடு.....

செவ்வாய், 6 மார்ச், 2012

குளிர்பான பாட்டிலில்.....


குளிர்பான பாட்டிலுக்குள் ஈ, எறும்பு...ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்டிய குளிர்பான நிறுவனம்...


மற்ற புகார்களைவிட உணவுப் பொருள் தொடர்பான புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுகின்றன

தினமும் நுகர்வோருக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ... அத்தனையும் சமாளிப்பதென்பது சாமானியப்பட்டதல்ல.  எது வந்தபோதும் நமது உரிமைகளை மட்டும் எந்த இடத்திலும் நாம் விட்டுத்தரக் கூடாது. நமக்கான உரிமைகளைப் போராடியாவது நாம் பெற்றாக வேண்டும். நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இந்த மனோபாவம்தான் தேவை. அநீதிக்கு அஞ்சேல். இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாகவும், நுகரின் கடமைகள் குறித்தும் கூறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.

"நல்ல தரமான பொருட்களை விற்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அல்லது அவசியமோ அதைவிட முக்கியமானது அல்லது அவசியமானது தரமான பொருட்களையே நுகர்வோரும் வாங்க வேண்டுமென்பது. சென்னையில் தி.நகரில் உள்ள  கடை ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் இது. வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கக் கூடிய அந்தக் கடையில் ஒருவர் செல்போன் வாங்கினார். அதில், ஏதோ டிஸ்ப்ளே பிரச்சினை சம்பந்தமாக வாங்கிய அந்தக் கடையையே அணுக, அவர்கள் வேறு ஒரு முகவரி கொடுத்து அங்கு போய் சர்வீஸ் செய்துகொள்ள அனுப்பியிருக்கின்றனர். அப்போதுதான் தெரிந்தது, அது அந்தக் கடையின் ஃபிரான்சிஸி இல்லை, வேறு ஒரு கடை என்று. இருந்தும் செல்போன் டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை என்று கடைக்காரரிடம் செல்போனைக் கொடுக்க... அவரோ வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இது டூப்ளிகேட் மாடல்...’ என்று சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர், நேராக செல்போன் வாங்கிய அதே கடைக்குச் சென்று விஷயத்தைக் கூறி சண்டையிட, அவர்கள் அந்த போனை வாங்கிக்கொண்டு புதிய ஒரிஜினல் போனைக் கொடுத்து விஷயத்தை முடித்துவிட்டார்கள். இது செல்போனில் மட்டும் நடைபெறும் விஷயமல்ல, உணவுப் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கும்போது, அது எடை சரிதானா என்பதை அங்கேயே சோதித்துக்கொள்ளலாம். ஆனால்,  தரமானதுதானா என்பதை எப்படிக் காணமுடியும்? எனவே, நுகர்வோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருள் தொடர்பான கலப்படங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த நுகர்வோர் புகார்கள், அவர்களுக்கு எதிராகவே அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பொருளின் பாக்கேஜைப் பிரித்து விடுவது, தகுந்த ஆதாரத்துடன் குறைகளை நிரூபிக்கத் தவறுதல், பில் வாங்காமலிருப்பது போன்றவை" என்று கூறியவர், தீர்வுக்கான வழிமுறைகள் பற்றிக் கூறினார் (பார்க்க - பெட்டிச் செய்தி).

சென்னை நுகர்வோர் (வடக்கு) நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு பற்றிக் காண்போம். சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த வி.ஆர்.சித்திரவேல்,  கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி சென்னை வடக்கு ஃபோர்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில் 20 விலையில் 600 மில்லி மிராண்டா குளிர்பானம் வாங்கியிருக்கிறார். பாட்டிலுக்குள் கறுப்பு வண்ணத்தில் தூசி கிடந்தது.   இதைக் கண்ட அவர், அந்தக் குளிர்பானத்தைத் தயாரித்த பெப்சி கம்பெனிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் தரவில்லை. ‘தரமற்ற அந்தக் குளிர்பானத்தைச் சாப்பிட்டிருந்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும். இதை மக்கள் பயன்படுத்தி பாதிக்கப்படக் கூடாது. எனவே, மிராண்டா குளிர்பானத்தை தயாரிக்கத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தனது புகாரில் தெரிவித்திருந்தார். அந்தக் குளிர்பானக் கடைக்கு விநியோகம் செய்தவர்களையும் அது தொடர்பான அத்துணை தகவல்களையும் சேர்த்து அளித்திருந்தார். குளிர்பானம் வாங்கிய கடைக்கு, சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒரு ஸ்டோர் விநியோகம் செய்துள்ளது. அந்தக் கடைக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி சப்ளை செய்திருக்கிறது. அந்த ஏஜென்சி, காஞ்சிபுரத்தில் உள்ள பெப்ஸிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் குளிர்பானத்தைப் பெற்றுள்ளது. ‘சுகாதாரமற்ற குளிர்பானத்தை விநியோகம் செய்த நான்கு பேரும் தலா 1 லட்சம் வீதம் 4 லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும். குளிர்பான நிறுவனத்தின் உரிமத்தை தடைசெய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பெப்ஸி நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகாததால் இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் குளிர்பான விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து, நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.

இதேபோன்ற மற்றொரு வழக்கின் தீர்ப்பும் நுகர்வோருக்குச் சாதகமாக அமைந்தது. திருப்போரூரைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் வாங்கிய பெப்ஸி பாட்டிலில் ஈக்கள், எறும்புகள் இறந்து கிடந்தன. கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர், திருப்போரூரில் ஒரு ஏஜென்சியிடம் குளிர்பானங்களை வாங்கியதாகக் கூறியிருக்கிறார். உடனே, குளிர்பானத்திற்கான தொகையைச் செலுத்தி பில் வாங்கியிருக்கிறார். பின்னர், இது குறித்து விளக்கம் கேட்டு, பெப்ஸி நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியும் அந்நிறுவனம் பதிலளிக்காததால், செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கிலும் நுகர்வோர் மன்ற விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியும்  யாரும் ஆஜராகவில்லை. பதிலும் அளிக்கவில்லை. சிறிது காலஅவகாசம் கொடுத்தும் எதிர்த் தரப்பினர் அலட்சியப்படுத்திய காரணத்தால், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் ஒரு தரப்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ‘குளிர்பான பாட்டில்கள் சீலிடப்பட்டு விற்கப்படுவதால், சில்லறைக் கடைக்காரர் அதற்குப் பொறுப்பல்ல. அதைக் கடைகளுக்கு வழங்கும் விநியோகஸ்தரும் பொறுப்பல்ல. குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே பொறுப்பு. எனவே, குளிர்பானம் அருந்துபவர்களுக்கு உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் தயாரித்த பெப்ஸி நிறுவனம், மனுதாரருக்கு 50,000 இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் குளிர்பானங்கள் தொடர்பான புகார்கள் வந்திருக்கின்றன. அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பொன்றையும் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த மோகன்லால் ஒரு வியாபாரி. ஒருமுறை இவரைச் சந்திக்க, தொழில் தொடர்பான பிரதிநிதிகள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு மோகன்லால், ‘லிம்கா’  குளிர்பானம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மொத்தம் 5 பாட்டில் குளிர்பானம் வாங்கியிருக்கிறார். அதில் ஒரு பாட்டிலில் கொசு போன்றதொரு பூச்சி இருந்ததைக் கண்டு, வியாபாரப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்து, பேச்சுவார்த்தை நடத்தாமலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பின்னர், வருத்தத்துடன் பூச்சி கிடந்த அந்த பாட்டிலுடன் கடைக்குச் சென்று விசாரித்தபோது, கடைக்காரர் சரியான பதில் சொல்லவில்லை. இதனால், அந்தக் குளிர்பானத்தைத் தயாரித்த ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனத்துக்கும் கடிதம் எழுத, அங்கிருந்தும் சரியான பதில் வரவில்லை.

இதனால், மன உளைச்சல் அடைந்த மோகன்லால், டெல்லி நுகர்வோர் குறைதீர்மன்றத்தில், தனது புகாரைக் குறிப்பிட்டு, ‘இதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதற்காக நஷ்டஈடாக 5.75 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, லிம்கா குளிர்பானத்தைத் தயாரித்த ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனத்துக்கும் அதை விற்பனை செய்த சில்லறை வியாபாரி ஹேமந்த் குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தப் புகாரை நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் எம்.பி.மகேந்தர் அட்டா விசாரித்தார். இதில், பாதிக்கப்பட்ட வியாபாரி மோகன்லாலுக்கு நீதிமன்றச் செலவுடன் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகையில், ‘மோகன்லால் குளிர்பானம் வாங்கியதற்கான ரசீதைத் தாக்கல் செய்யவில்லை’ எனக் கூற, ‘குளிர்பானம் வாங்குவோர் யாரும் பில் வாங்குவதில்லை’ என்று நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கூறி, அவரது பதிலை ஏற்க மறுத்தார். பிரபல குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களின் மீதுதான் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. சாதாரண நிறுவனங்களின் மீதும் புகார் அளிக்கலாம்.
ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனம்.

நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு வந்த வழக்கொன்றில் மன உளைச்சலுக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. முத்துக்குமார் என்பவர், 2007ம் ஆண்டு நாமக்கல்லில் உள்ள ஒரு கடையில் 2 குளிர்பானம் வாங்கியுள்ளார். அதில், ஒரு பாட்டிலில் இரும்பு ‘ஸ்குரூ’ கிடந்துள்ளது. மன உளைச்சல் அடைந்த அவர், நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதி கிருஷ்ணராஜா, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், சேவைக்  குறைபாடு, மன உளைச்சல் ஆகியவற்றுக்காக நிறுவனம், விற்பனையாளர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தனர்.

குளிர்பான விலையான பத்து ரூபாய்,  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக பத்தாயிரம் ரூபாய், வழக்கு செலவாக 2,500 ரூபாய் ஆகியவற்றை 6 சதவிகித வட்டியுடன் வழக்கு தொடர்ந்த தேதியில் இருந்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

(பொங்குவோம்)

எப்படி புகார் அளிப்பது?

•  சில பொருட்களைப் பிரித்தால் கெட்டுவிடும். உதாரணத்திற்கு பருப்பு, பிஸ்கெட் போன்ற பொருட்கள். எனவே, தரமற்ற அல்லது கலப்படமான என்று தெரிந்தால் பாக்கெட்டைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். இப்போது உள்ள பாக்கெட்டுகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்களில் தெரியும்படிதான் வருகின்றன. அதனால், பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

•  சம்பந்தப்பட்ட துறைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்குள் பதில் அனுப்பவில்லை என்றால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

• எந்தப் புகாரையும் அனுப்பும் முன் எல்லா ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். சரியான, முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் எதிர்த்தரப்பு பெரிய நிறுவனம் என்றால், வழக்கு நமக்கு சாதகமாக இல்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.

• ஒருவேளை அந்த உணவையோ, பானத்தையோ உட்கொண்டதால் உடலில் ஏதேனும் பிரச்சினைஏற்பட்டு, மருத்துவ சோதனையும், அதை உறுதிப்படுத்தியிருந்தால் மருத்துவ ஆதாரங்களும், பொருள் வாங்கியதற்கான ஆதாரமும் நுகர்வோருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தரும்.

கருத்துகள் இல்லை: