சிறந்த நேரம்

homepage uhren clock for blog

உதவு அல்லது உதவுபவர்களுக்கு வழிவிடு.....

வியாழன், 8 மார்ச், 2012

மகளிர் தினம்


நூறாவது சர்வதேச மகளிர் தினம் இன்று


ர்வதேச மகளிர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, இது நூறாவது சர்வதேச மகளிர் தினமாகும் என்ற வகையில் இன்றைய தினம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு நாடும் நிறுவனங்களும் பல்வேறு தொனிப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை இவ்வருடம் "கல்வி, பயிற்சி மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் சமத்துவ வாய்ப்பு : பெண்களுக்கு கண்ணியமான வேலைக்கான வழி" எனும் தொனிப்பொருளில் இத்தினத்தைக் கொண்டாடுகிறது.
ஆனால், 1911 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 ஆம் திகதியல்ல மார்ச் 19 ஆம் திகதியே கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டில், 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வேலை நேரத்தைக் குறைக்கவும் ஊதியத்தை அதிகரிக்கவும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குமாறும் கோரி சுமார் 15000 பெண்கள் பேரணியொன்றை நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.
1909 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிசக் கட்சி பெப்;ரவரி 28 ஆம் திகதியை தேசிய மகளிர் தினமாக பிரகடனப்படுத்தி அமெரிக்கா முழுவதும் கொண்டாடியது. 1913 ஆம் ஆண்டு வரை பெப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1910 ஆம் ஆண்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் நடந்த உழைக்கும் பெண்கள் மாநாட்டின்போது ஜேர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவியான கிளாரா ஸெட்கிட், மகளிர் தினத்தை சர்வதேச ரீதியாக கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அதன்படி அடுத்த ஆண்டில் 1911 ஆம்  ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஆஸ்திரியா, டென்மார்க், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய முதல் தடவையாக நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

1848 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலான நாடுகளில் புரட்சி அலை வீசியபோது பிரஷ்யாவின் (தற்போதைய ஜேர்மனியின் ஒரு பகுதி) மன்னன் பெண்களுக்கும் வாக்குரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்த தினம் மார்ச் 19 ஆம் திகதியாகும் என்பதே அது பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது. (மேற்படி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது வேறு கதை)

நியாயமான ஊதியம், சிறந்த வேலைத் தள சூழல் ஆகியவற்றுக்காக பெண்கள் இத்தினத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதனிடையே 1911 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 146 பெண்கள் உயிரிழந்தை பெண் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்பான கவனத்தை அதிகரித்திருந்தது.

ஆனால், உலகெங்கும் ஒரே சமயத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்பதற்கமைய 1913 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஏன் மார்ச் 8 ஆம் தேதி? 

1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நியூயோர்க் நகர ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண்கள் பாரிய வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அக்காலத்தில் ஆண்களுக்கான வேலை நேரம் 10 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டிருந்தது. எனினும் பெண்கள் தொடர்ந்தும் 16 மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி வேலை நிறுத்தம் நடைபெற்றது. அத்தினத்தையொட்டியே மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினமாக தெரிவு செய்யப்பட்டது.

1917 ஆம் ஆண்டு ரஷ்யாவின் பெப்ரவரி புரட்சியின் போது மகளிர் தினத்தை அனுஷ்டிப்பதற்காக திரண்ட பெண்கள், ஸார் மன்னருக்கெதிராக போராட்டம் நடத்தி அப்புரட்சியிலும் பெரும் பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் அவ்வருடம்  முதல் தடவையாக சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஐ.நா. அனுசரணை வழங்க ஆரம்பித்தது.

தற்போது, ரஷ்யா, உக்ரேன், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், பெலாரஸ், புர்கினா பெஸோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஸகஸ்தான், மோல்டோவா, மொங்கோலியா, மொன்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் உத்தியோகபூர்வ விடுமுறை தினமாகமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை சீனா, நேபாளம், மடகஸ்கார் ஆகிய நாடுகளில் இத்தினம் பெண்களுக்கு மாத்திரம்  விடுமுறை  வழங்கப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை சுகாதாரம் கல்வி போன்ற துறைகளில் பெண்களுக்கான சமத்துவ  இலக்கை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமடைந்திருந்தாலும் பெண்களுக்கு சமத்துவ வாய்ப்புகள் வழங்கலாக அது பரிமாற்றப்படவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வெளியிடப்பட்ட 'புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகள்' முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இலங்கையில் பல துறைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சமத்துவமின்மை நிலவுவதை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தொழிலாளர் படையைப் பொறுத்தவரை இலங்கையில் பாலின சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. இவ்விடயத்தில் அதிக இடைவெளி கொண்ட நாடுகளில் இலங்கை 20 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புள்ளி;விபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் தொழிலாளர் படையல் 29.8 சதவீதம் மாத்திரமே பெண்களாகும்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்குபற்றல் தொடர்ந்துதம் குறைவாக (5.7 சதவீதம்) இருப்பதை அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ரீதியில் பத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே பெண்கள் அரச தலைவர்களாக உள்ளனர். பெண்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் உயர்மட்ட வர்த்தகம், கைத்தொழில் துறைகளில் தீர்மானம் மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் குறைந்தளவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வருட சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக விடுத்த செய்தியில் 'பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது.

                                                                                                                                                                                  - (ஆர். சேதுராமன்)

புதன், 7 மார்ச், 2012

வெளிநாட்டில் முதுகலை பட்டம் படிக்க ஸ்காலர்ஷிப்


மஹேந்திரா ஸ்காலர்ஷிப்!


ட்டப் படிப்பு முடித்துவிட்டு முதுநிலைப் பட்டப் படிப்பை ஏதேனும் ஒரு வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை பூர்த்திசெய்கிறது, கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை.

வெளிநாட்டில் ஏதேனும் ஓர் பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஓர் துறையில் இந்த ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் உதவித்தொகை அளித்து உதவுகிறது கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்பில் அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலைப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள்தான். ஆனால், 2012 ஜூன் இறுதிக்குள் இளநிலைப் பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். விண்ணப்பங்களை கே.சி. மஹேந்திரா கல்வி அறக்கட்டளை தலைமை அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது அறக்கட்டளையின் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.  முதல் கட்டமாக மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு  மே மாத இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 31.
விவரங்களுக்கு : http://www.nanhikali.org/aboutus/grant_scholarships.aspx
விண்ணப்ப படிவத்திற்குhttp://www.nanhikali.org/aboutus/images/application_formTRUST.pdf

செவ்வாய், 6 மார்ச், 2012

குளிர்பான பாட்டிலில்.....


குளிர்பான பாட்டிலுக்குள் ஈ, எறும்பு...ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்டிய குளிர்பான நிறுவனம்...


மற்ற புகார்களைவிட உணவுப் பொருள் தொடர்பான புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுகின்றன

தினமும் நுகர்வோருக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள் ... அத்தனையும் சமாளிப்பதென்பது சாமானியப்பட்டதல்ல.  எது வந்தபோதும் நமது உரிமைகளை மட்டும் எந்த இடத்திலும் நாம் விட்டுத்தரக் கூடாது. நமக்கான உரிமைகளைப் போராடியாவது நாம் பெற்றாக வேண்டும். நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இந்த மனோபாவம்தான் தேவை. அநீதிக்கு அஞ்சேல். இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாகவும், நுகரின் கடமைகள் குறித்தும் கூறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.

"நல்ல தரமான பொருட்களை விற்க வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அல்லது அவசியமோ அதைவிட முக்கியமானது அல்லது அவசியமானது தரமான பொருட்களையே நுகர்வோரும் வாங்க வேண்டுமென்பது. சென்னையில் தி.நகரில் உள்ள  கடை ஒன்றில் நடந்த ஒரு சம்பவம் இது. வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கக் கூடிய அந்தக் கடையில் ஒருவர் செல்போன் வாங்கினார். அதில், ஏதோ டிஸ்ப்ளே பிரச்சினை சம்பந்தமாக வாங்கிய அந்தக் கடையையே அணுக, அவர்கள் வேறு ஒரு முகவரி கொடுத்து அங்கு போய் சர்வீஸ் செய்துகொள்ள அனுப்பியிருக்கின்றனர். அப்போதுதான் தெரிந்தது, அது அந்தக் கடையின் ஃபிரான்சிஸி இல்லை, வேறு ஒரு கடை என்று. இருந்தும் செல்போன் டிஸ்ப்ளே வேலை செய்யவில்லை என்று கடைக்காரரிடம் செல்போனைக் கொடுக்க... அவரோ வாங்கிப் பார்த்துவிட்டு, ‘இது டூப்ளிகேட் மாடல்...’ என்று சொல்லியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர், நேராக செல்போன் வாங்கிய அதே கடைக்குச் சென்று விஷயத்தைக் கூறி சண்டையிட, அவர்கள் அந்த போனை வாங்கிக்கொண்டு புதிய ஒரிஜினல் போனைக் கொடுத்து விஷயத்தை முடித்துவிட்டார்கள். இது செல்போனில் மட்டும் நடைபெறும் விஷயமல்ல, உணவுப் பொருட்கள் பாக்கெட்டில் அடைத்து விற்கும்போது, அது எடை சரிதானா என்பதை அங்கேயே சோதித்துக்கொள்ளலாம். ஆனால்,  தரமானதுதானா என்பதை எப்படிக் காணமுடியும்? எனவே, நுகர்வோர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருள் தொடர்பான கலப்படங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த நுகர்வோர் புகார்கள், அவர்களுக்கு எதிராகவே அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, பொருளின் பாக்கேஜைப் பிரித்து விடுவது, தகுந்த ஆதாரத்துடன் குறைகளை நிரூபிக்கத் தவறுதல், பில் வாங்காமலிருப்பது போன்றவை" என்று கூறியவர், தீர்வுக்கான வழிமுறைகள் பற்றிக் கூறினார் (பார்க்க - பெட்டிச் செய்தி).

சென்னை நுகர்வோர் (வடக்கு) நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு பற்றிக் காண்போம். சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த வி.ஆர்.சித்திரவேல்,  கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி சென்னை வடக்கு ஃபோர்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு குளிர்பானக் கடையில் 20 விலையில் 600 மில்லி மிராண்டா குளிர்பானம் வாங்கியிருக்கிறார். பாட்டிலுக்குள் கறுப்பு வண்ணத்தில் தூசி கிடந்தது.   இதைக் கண்ட அவர், அந்தக் குளிர்பானத்தைத் தயாரித்த பெப்சி கம்பெனிக்கு தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்கள் எந்தப் பதிலும் தரவில்லை. ‘தரமற்ற அந்தக் குளிர்பானத்தைச் சாப்பிட்டிருந்தால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும். இதை மக்கள் பயன்படுத்தி பாதிக்கப்படக் கூடாது. எனவே, மிராண்டா குளிர்பானத்தை தயாரிக்கத் தடைவிதிக்க வேண்டும்’ என்று தனது புகாரில் தெரிவித்திருந்தார். அந்தக் குளிர்பானக் கடைக்கு விநியோகம் செய்தவர்களையும் அது தொடர்பான அத்துணை தகவல்களையும் சேர்த்து அளித்திருந்தார். குளிர்பானம் வாங்கிய கடைக்கு, சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒரு ஸ்டோர் விநியோகம் செய்துள்ளது. அந்தக் கடைக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி சப்ளை செய்திருக்கிறது. அந்த ஏஜென்சி, காஞ்சிபுரத்தில் உள்ள பெப்ஸிகோ இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் குளிர்பானத்தைப் பெற்றுள்ளது. ‘சுகாதாரமற்ற குளிர்பானத்தை விநியோகம் செய்த நான்கு பேரும் தலா 1 லட்சம் வீதம் 4 லட்சம் நஷ்ட ஈடாகத் தரவேண்டும். குளிர்பான நிறுவனத்தின் உரிமத்தை தடைசெய்ய வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பெப்ஸி நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகாததால் இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் குளிர்பான விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து, நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.

இதேபோன்ற மற்றொரு வழக்கின் தீர்ப்பும் நுகர்வோருக்குச் சாதகமாக அமைந்தது. திருப்போரூரைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் வாங்கிய பெப்ஸி பாட்டிலில் ஈக்கள், எறும்புகள் இறந்து கிடந்தன. கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர், திருப்போரூரில் ஒரு ஏஜென்சியிடம் குளிர்பானங்களை வாங்கியதாகக் கூறியிருக்கிறார். உடனே, குளிர்பானத்திற்கான தொகையைச் செலுத்தி பில் வாங்கியிருக்கிறார். பின்னர், இது குறித்து விளக்கம் கேட்டு, பெப்ஸி நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியும் அந்நிறுவனம் பதிலளிக்காததால், செங்கல்பட்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கிலும் நுகர்வோர் மன்ற விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பியும்  யாரும் ஆஜராகவில்லை. பதிலும் அளிக்கவில்லை. சிறிது காலஅவகாசம் கொடுத்தும் எதிர்த் தரப்பினர் அலட்சியப்படுத்திய காரணத்தால், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் ஒரு தரப்பாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ‘குளிர்பான பாட்டில்கள் சீலிடப்பட்டு விற்கப்படுவதால், சில்லறைக் கடைக்காரர் அதற்குப் பொறுப்பல்ல. அதைக் கடைகளுக்கு வழங்கும் விநியோகஸ்தரும் பொறுப்பல்ல. குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே பொறுப்பு. எனவே, குளிர்பானம் அருந்துபவர்களுக்கு உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் தயாரித்த பெப்ஸி நிறுவனம், மனுதாரருக்கு 50,000 இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் குளிர்பானங்கள் தொடர்பான புகார்கள் வந்திருக்கின்றன. அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பொன்றையும் பார்ப்போம்.

டெல்லியைச் சேர்ந்த மோகன்லால் ஒரு வியாபாரி. ஒருமுறை இவரைச் சந்திக்க, தொழில் தொடர்பான பிரதிநிதிகள் வந்திருந்தனர். அப்போது அவர்களுக்கு மோகன்லால், ‘லிம்கா’  குளிர்பானம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மொத்தம் 5 பாட்டில் குளிர்பானம் வாங்கியிருக்கிறார். அதில் ஒரு பாட்டிலில் கொசு போன்றதொரு பூச்சி இருந்ததைக் கண்டு, வியாபாரப் பிரதிநிதிகள் அதிர்ச்சி அடைந்து, பேச்சுவார்த்தை நடத்தாமலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பின்னர், வருத்தத்துடன் பூச்சி கிடந்த அந்த பாட்டிலுடன் கடைக்குச் சென்று விசாரித்தபோது, கடைக்காரர் சரியான பதில் சொல்லவில்லை. இதனால், அந்தக் குளிர்பானத்தைத் தயாரித்த ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனத்துக்கும் கடிதம் எழுத, அங்கிருந்தும் சரியான பதில் வரவில்லை.

இதனால், மன உளைச்சல் அடைந்த மோகன்லால், டெல்லி நுகர்வோர் குறைதீர்மன்றத்தில், தனது புகாரைக் குறிப்பிட்டு, ‘இதனால் தனது வியாபாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. இதற்காக நஷ்டஈடாக 5.75 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, லிம்கா குளிர்பானத்தைத் தயாரித்த ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனத்துக்கும் அதை விற்பனை செய்த சில்லறை வியாபாரி ஹேமந்த் குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தப் புகாரை நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் எம்.பி.மகேந்தர் அட்டா விசாரித்தார். இதில், பாதிக்கப்பட்ட வியாபாரி மோகன்லாலுக்கு நீதிமன்றச் செலவுடன் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடுகையில், ‘மோகன்லால் குளிர்பானம் வாங்கியதற்கான ரசீதைத் தாக்கல் செய்யவில்லை’ எனக் கூற, ‘குளிர்பானம் வாங்குவோர் யாரும் பில் வாங்குவதில்லை’ என்று நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கூறி, அவரது பதிலை ஏற்க மறுத்தார். பிரபல குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களின் மீதுதான் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதல்ல. சாதாரண நிறுவனங்களின் மீதும் புகார் அளிக்கலாம்.
ஹிந்துஸ்தான் கோகோ-கோலா நிறுவனம்.

நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு வந்த வழக்கொன்றில் மன உளைச்சலுக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. முத்துக்குமார் என்பவர், 2007ம் ஆண்டு நாமக்கல்லில் உள்ள ஒரு கடையில் 2 குளிர்பானம் வாங்கியுள்ளார். அதில், ஒரு பாட்டிலில் இரும்பு ‘ஸ்குரூ’ கிடந்துள்ளது. மன உளைச்சல் அடைந்த அவர், நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த நாமக்கல் நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதி கிருஷ்ணராஜா, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், சேவைக்  குறைபாடு, மன உளைச்சல் ஆகியவற்றுக்காக நிறுவனம், விற்பனையாளர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தனர்.

குளிர்பான விலையான பத்து ரூபாய்,  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக பத்தாயிரம் ரூபாய், வழக்கு செலவாக 2,500 ரூபாய் ஆகியவற்றை 6 சதவிகித வட்டியுடன் வழக்கு தொடர்ந்த தேதியில் இருந்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

(பொங்குவோம்)

எப்படி புகார் அளிப்பது?

•  சில பொருட்களைப் பிரித்தால் கெட்டுவிடும். உதாரணத்திற்கு பருப்பு, பிஸ்கெட் போன்ற பொருட்கள். எனவே, தரமற்ற அல்லது கலப்படமான என்று தெரிந்தால் பாக்கெட்டைப் பிரிக்காமல் வைத்திருக்க வேண்டும். இப்போது உள்ள பாக்கெட்டுகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் கவர்களில் தெரியும்படிதான் வருகின்றன. அதனால், பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம்.

•  சம்பந்தப்பட்ட துறைக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்குள் பதில் அனுப்பவில்லை என்றால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

• எந்தப் புகாரையும் அனுப்பும் முன் எல்லா ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். சரியான, முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் எதிர்த்தரப்பு பெரிய நிறுவனம் என்றால், வழக்கு நமக்கு சாதகமாக இல்லாமல் போகும் வாய்ப்பும் உண்டு.

• ஒருவேளை அந்த உணவையோ, பானத்தையோ உட்கொண்டதால் உடலில் ஏதேனும் பிரச்சினைஏற்பட்டு, மருத்துவ சோதனையும், அதை உறுதிப்படுத்தியிருந்தால் மருத்துவ ஆதாரங்களும், பொருள் வாங்கியதற்கான ஆதாரமும் நுகர்வோருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தரும்.

வாடகை வீடு


வூடு கட்டி அடிக்கிறாங்க
பாரதி



உணவுப் பொருள் விலை உயர்வு... பெட்ரோல் விலை உயர்வு... அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என்று மூன்றுபுறமும் மொத்தடிபட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு நான்காவது புறமிருந்தும் ஒரு பேரிடி. அது வீட்டு வாடகை உயர்வு.

வேலை தேடி கிராமங்களிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்குப் படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னையில் வசிப்போரின் தற்போதைய எண்ணிக்கை 46 லட்சம்.
படிப்படியாக உயர்ந்த இந்த மக்கள் தொகை காரணமாக வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமானது. மற்றொருபுறம். நகர் மயமாக்கலில் தீவிரம், பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவு ஆகியவற்றால் அதிக சம்பளம் நிறைந்த வேலைகள்... மக்கள் கையில் தாராளப் பணப்புழக்கம்... இவையெல்லாம் வாடகை உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள். இது தவிர இன்னும் பல காரணங்களும் உள்ளன.

"இன்றைய நிலையில் சென்னை என்றல்ல மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு என்று தமிழகத்தின் பெருநகரங்களின் வீட்டு வாடகைகள் எல்லாமே அதிகரித்துதான் வருகின்றன..." என்கிறார் ஈரோட்டில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் மகேஷ்.

"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, நான் குடியிருந்த வீட்டுக்கு வெள்ளையடிச்ச ஹவுஸ் ஓனர், ‘இந்த மாசத்திலேர்ந்து ஆயிரம் ரூபா வாடகை உயர்த்தியிருக்கேன்...’னு கூலா சொல்லிட்டுப் போயிட்டார். இவங்க நினைச்சுக்கிட்டால் வாடகையை உயர்த்துறாங்க... ஆனால், நான் வேலை செய்யற கம்பெனில மூணு வருஷமா இன்க்கிரிமெண்ட்டே இல்லே... என்ன பண்ணித் தொலைக்கிறது..? மத்த செலவுகளைக் குறைச்சுக்கிட்டு, சமாளிச்சிக்கிட்டு இருக்கோம்..." என்கிறார் திருச்சி காஜாமலைக் காலனியைச் சேர்ந்த குமரேசன் பரிதாபமாக.

தரகர்கள் தர்பார்
"வீடுகளின் திடீர் திடீர் வாடகை அதிகரிப்புக்கு புரோக்கர்களும் ஒரு முக்கியக் காரணம்..." என்கிறார் மதுரையைச் சேர்ந்த பாண்டுரங்கன். "இவர்களுக்கு ஹவுஸ் ஓனர் மற்றும் வாடகைதாரர் என்று இரண்டு தரப்பிலும் ஒரு மாத வாடகை கமிஷன் கிடைக்கிறது என்கின்ற  காரணத்தால், ஆறாயிரம் வாடகை உள்ள வீட்டை எட்டாயிரம் என்றும் எட்டாயிரம் வாடகை உள்ள வீட்டை பதினோராயிரம் என்றும் இஷ்டத்துக்கு உயர்த்திடறாங்க... இவங்களுக்குக் கிடைக்கும் சில ஆயிரம் கமிஷனுக்காக சாதாரணக் குடிமக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறாங்க..." -கோபத்துடன் குமைந்தார் பாண்டுரங்கன்.

"வாடகைக்கு வீடு பிடிக்கணும்னா புரோக்கர்கள் பிடிச்சாதான் முடியும். ஏன்னா, எங்கே வீடு காலியா இருக்குனு அவங்களுக்குத்தான் தெரியும். சில இடத்துல வீட்டு ஓனரே புரோக்கர் வேணாம்னு சொல்வாங்க. இவங்க விடமாட்டாங்க... ‘நீங்க தரவேண்டாம். நாங்க குடிவர்றவங்ககிட்ட மட்டும் கமிஷனை வாங்கிக்கிறோம்’னு இந்த சைடுல வாடகையை அதிகமா சொல்லி கமிஷனைக் கறந்திடுவாங்க..." என்கிறார் சென்னையில் வீடு வாங்கி, விற்கிற தொழிலில் ஆலோசகராக 12 வருடங்களாக ஈடுபட்டு வரும் கிருஷ்ணமூர்த்தி.

அவரிடம் எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை குறைய வாய்ப்புண்டா? என்று கேட்டோம்.  "மக்கள்தொகைப் பெருக்கம், நல்ல சம்பளம் காரணமாக முன்னெல்லாம் அதாவது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி 100 ரூபாயா இருந்த சதுர அடி இன்னைக்கு 300 ரூபாக்குப் போகுது. வீடுன்னு பார்த்தால், இப்போதைக்கு 450 - 500 சதுர அடிக்கு சிங்கிள் பெட்ரூம் வீடு 15 லட்சம் முதல் 20 லட்சம்வரை போகுது. 650 -700 சதுர அடிக்கு டபுள் பெட்ரூம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரையும் 800 சதுர அடி 28 லட்சம் முதல் 32 லட்சம் வரையும் போகிறது. இப்போ தமிழ்நாடு அரசு வேற, நிலமதிப்ப அதிகப்படுத்தப் போறதா சொல்லியிருக்காங்க. இனி குறைய வாய்ப்பே இல்ல"  என்று ஆதங்கப்பட்டார்.

சென்னையில் இடம் வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் நாகராஜ்,  "இடநெருக்கடி தாங்க முக்கியக் காரணம். இப்பல்லாம் சென்னையில ஓர் இடத்தக் கூட காலியா பாக்க முடியாது. அப்படி இருந்தா, அந்த இடம் ஏதோ பிரச்சினைல இருக்குனு அர்த்தம். பெரும்பாலான ஏரியாவுல வீடு சதுர அடி 2,000க்கு மேல போட்டு இருக்கு. அடுத்ததா, இதில் போட்டியும் அதிகமாயிடுச்சு. வீடு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கிறதால முன்னப்பின்ன ஆனாலும் முடிச்சுடத்தான் பாக்குறாங்க" என்றார்.

அட்வான்ஸ் அடாவடி...
வீட்டு வாடகையை கூட சமாளித்து விடலாம். ஆனால், வீட்டு உரிமையாளர்கள் வாங்கும் முன்பணம்தான் பல நேரங்களில் மூர்ச்சையடைய வைக்கிறது. நகரங்களில் வாடகையைப்போல் பத்து மடங்கு முன்பணம் வசூலிக்கப்படுகிறது. "தாம்பரத்தில் மூன்றாயிரம் வாடகையில் குடியிருந்த நான், மேற்கு மாம்பலத்துக்குக் குடிவந்தபோது ஒன்பதாயிரம் ரூபாய் வாடகை. அட்வான்ஸ் 90 ஆயிரம். மூன்று காசு வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்தேன்..." என்கிறார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் சந்திரசேகரன்.

இப்படி பல மடங்கு முன்பணம் கேட்பதால்,  வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்திருக்கும் பெண்கள் பலரும் மகளிர் விடுதியில் தங்குகின்றனர். அதிகம் போனால் மாதம் 3,500 முதல் 5,000 வரை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவே நான்குபேர் வீடு எடுத்து தங்கினால் குறைவாகத்தான் வரும். ஆனால், 8,000 ரூபாய் வாடகை வீட்டுக்கு 80,000 அட்வான்ஸ் என்பது இயலாத நிலையில்தான் விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

டார்ச்சரில் இத்தனை வகைகளா?
சென்னையில் அடையாறு, திருவான்மியூர், தி.நகர், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், பூந்தமல்லி, அண்ணாநகர், வேளச்சேரி என ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வாடகை கதிகலங்க வைக்கிறது. அதிலும் வீட்டு உரிமையாளர்களின் விசாரணைகள் கிட்டதட்ட சிபிஐ என்கொயரி மாதிரியே இருக்கும். ‘வெஜ்ஜா? நான்வெஜ்ஜா? வீட்டில் எத்தனை பேர்? உறவினர்கள் யாராவது வருவார்களா? உடல்நிலை சரியில்லை என்றாலும் முறைவாசல் தெளிக்க வேண்டும்...’ குடிபோவதற்கு முன்பே நமக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்துவிடும். பல்லாவரத்தில் குடியிருந்த நரசிம்மன், "நான் குடியேறியபோது எங்களுக்கு ஒரு குழந்தைதான் இருந்தது. ரெண்டு வருஷம் பிரச்சினையில்லே... ரெண்டாவது வருஷம் என் மனைவி கர்ப்பம் ஆனாங்க. உடனே ஹவுஸ் ஓனர், ‘அந்தக் குழந்தை பிறக்கறதுக்குள்ளே வீட்டைக் காலி பண்ணிடுங்க. இல்லாட்டி, வாடகையை ஆயிரம் ரூபாய் ஏத்திக் கொடுத்துடுங்க...’ என்று சொன்னார். மனிதாபிமானமே இல்லாத ஒருத்தர் வீட்டில் குடியிருக்கக் கூடாதுன்னு முடிவு செய்து, அடுத்த மாதமே காலி செய்துட்டோம்..." என்றார் வேதனையுடன்.

அரசு ஒரு மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறதென்றால், இவர்கள் வசூலிக்கும் மின்கட்டணமோ அதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும். சென்னையில் கரண்ட் பில் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. கேட்டால், ‘தனி மீட்டர் இல்லை. சப் மீட்டர்தான்’ என்பார்கள். இதுதவிர, பராமரிப்புக்கு 200, தண்ணீருக்கு 150 என எப்படியும் வாடகை போக அதிகமாக ஐநூறு முதல் ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும்.

பாடலாசிரியர் குகை மா. புகழேந்தி கூறும்போது, "இ.பி.ல.யூனிட்டுக்கு 75 பைசா வாங்கும்போதே இவங்க தனியா, கூடுதலா 4.50 பைசா வாங்குறாங்க. இனி இ.பி. 3.50 ஆகப் போகுது. அப்போ 10 ரூபாய் வரை வாங்குவாங்க. அப்போ மாசா மாசம் 2,000 ரூபாய் கரண்டுக்கே அழ வேண்டியிருக்கும். வீடுகளில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருக்கிறது. ஆனா, யாருமே அதைக் கண்டுக்கறதில்லே" என்றார்.

பேச்சிலர் ROCKS
முன்பெல்லாம் ‘குடும்பத்தினருக்குதான் வீடு, பேச்சிலர்கள் கெட் ஆவுட்’  கோஷம் போட்ட வீட்டு உரிமையாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக பேச்சிலர்களுக்கு மட்டுமே வீடு என்று தங்கள் கோஷத்தை மாற்றிக் கொண்டார்கள். அதனால், பேச்சிலர் வீட்டில் நல்ல மழை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பேச்சிலர்கள் தங்கியிருந்தால், சொந்தக்காரர்கள் அதிகம் வரமாட்டார்கள். நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கியிருப்பதால், வாடகை அதிகம் என்றாலும் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.

பாடலாசிரியர் குகை.மா.புகழேந்தி, "வீட்டு வாடகை உயர்வுக்கு முதல் காரணம் ஐடி கம்பெனியின் பெருக்கம்தான். அதனால, 1,500 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்துக்கு நாலு பேர் சேர்ந்து 7,000 கொடுக்கத் தயாராகிடுறாங்க. சென்னைய விட்டு தள்ளிப் போனாதான் 2,000, 3,000 ரூபாய்க்கு வீடு பாக்க முடியும். அதுகூட குருவிக்கூடு மாதிரி சின்னதாத்தான் இருக்கும். ஆனால், இப்ப அதுக்கும் பிரச்சினை.நான் 1,500 ரூபாய்க்கு வாடகைக்கு வந்தேன். இப்ப ஆறு மாசத்துக்கொருதரம் ஐநூறு, ஆயிரம்னு ஏத்தி கடைசியா 4,000 ரூபாயாகிடுச்சு. நான் காலி பண்ணினால், அங்கே அதிக வாடகை கொடுத்து ஐடி கம்பெனி ஆட்கள் அங்கே குடிவரத் தயாரா இருக்காங்க... இந்த நிலையில் ஒருநாள், சொந்தக்காரங்க யாரையோ குடி வைக்கப் போறோம்னு சொல்லி என்னைக் காலி பண்ண வச்சாங்க. நானும் டைம்கேட்டு காலி பண்ணிட்டேன். அப்புறம் பாத்தா, அங்கே அதிக வாடகைக்கு வேறு சிலரைக் குடி வச்சிருக்காங்க..." என்று  ஆதங்கத்துடன்  தெரிவித்தார்.

‘ஐடி மக்களும் குறிப்பாக பேச்சிலரும்தான் சென்னையில் வீட்டு வாடகை உயர்விற்கு காரணம்’ என்று பலரும் கூற, ஐடி நிறுவன ஊழியர் சுப்பு, "எனக்கு வீடு, ஆவடில இருக்குங்க. ஆனா, ஆபீஸ் பக்கத்துலயே பாக்கலாம்னு விசாரிச்சப்போ தலையே சுத்துது. 3,000, 4,000 வாடகை வீட்டுக்கு 7,000 ரூபாய் சொன்னாங்க. முதல்ல இங்க வந்த ஐடி மக்கள், என்ன வாடகையா இருந்தாலும் கொடுக்கத் தயாரா இருந்ததை அவங்க தங்களுக்குச் சாதகமா மாத்திக்கிட்டாங்க. அதேபோல வெளிநாடு போய்ட்டு இங்க வந்து செட்டிலாக வந்தவங்களுக்குப் பணத்தோட அருமை தெரியல. நாலு பேரு போய் வீடு கேக்கும்போது ஐடினு சொன்னதும் கொஞ்சம் இல்ல, ரொம்பவே அதிக வாடகை சொல்வாங்க. ஒரு ஆளுக்கு 3,000,4,000ம்னு கணக்குப் பண்ணி நாலு பேருக்கு 12,000 ரூபாய்ல இருந்து 15,000 வரை வாங்குவாங்க. ‘ரொம்ப அதிகம் சார்’னு சொன்னா, ‘என்ன சார் ஐடில இருக்கீங்க’ அப்டினு கூலா சொல்றாங்க" என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைத்தார்.

"கணிப்பொறித் துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்பதை ஏற்க முடியாது. சதவிகிதத்தில் வேண்டுமானால் இது கொஞ்சம் அதிகமாயிருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களுமே சிறப்பாக உள்ளன. நல்லா சம்பாதிக்கிறாங்க. தாராளமா கைல பணம் புழங்குது. அதிகமா அலையவும் மக்கள் தயாராயில்லை. அதனால, எங்க வீடு இருந்தாலும் அவங்க கேட்கிற வாடகையைக் கொடுத்துட்டு குடிபோகவே விரும்பறாங்க..." என்று பெருமூச்சு விடுகிறார் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் சர்வீஸில் இருக்கும் ஆனந்த்.

அசோக் லேலாண்டில் பணியாற்றும் மஞ்சுநாத், "நிலத்தோட மதிப்பு அதிகரிச்சுட்டேபோறதுதான் வாடகை உயர்வுக்கு  முக்கியக் காரணம். ஐடி மக்கள் மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது. பேச்சிலர்ஸ் அஞ்சு பேருக்கு 10,000 கொடுக்கிறது பிரச்சினையா இருக்காது. ஆனா, ஒரு ஃபேமிலி 10,000 கொடுக்கிறது பெரிய தொகைதான். இப்போ 15,000, 20,000 மாசச் சம்பளம் இல்லைனா சென்னையில் காலம் தள்ள முடியாது. இதையெல்லாம் கட்டுப்படுத்த அரசு ஏதாவது வழி பண்ணணும்... இந்த ஏரியாவுல இவ்ளோதான் வாடகை இருக்கணும்னு சொல்லணும்... அதை மீறி அதிகமா வாடகை வசூலிக்கிற வீட்டு உரிமையாளர்களை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தணும்" என்றார் ஆவேசமாக.

ஓனர்கள் புலம்பல்ஸ்
வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். பூந்தமல்லியைச் சேர்ந்த புனிதா, "இப்போலாம் தொழிற்சாலைகள், கம்பெனிகள் அதிகமாயிடுச்சு. பஸ் போக்குவரத்துக்குப் பக்கமா இருக்கணும் இல்லைனா, ஆபீஸ் பக்கத்துலயே வீடு இருக்கணும்னு எதிர்பாக்கிறாங்க. அதுலயும் தனி வீடு, இ.பி, தனியா இருக்கணும்னு அவங்கவங்களுக்கு தகுந்த எதிர்பார்ப்புகளோட வர்றாங்க. இதனால, போட்டி அதிகமாயிடுச்சி. ஒருத்தர் வீட்டை காலி பண்ணிட்டுப் போனால், அந்த வீட்டை நாலு பேர் கேட்டு வர்றாங்க. டிமாண்ட் அதிகமா இருந்தால், வாடகை ஏறாமல் என்ன செய்யும்? விக்கிற விலைவாசியில எங்களுக்கும் வேறு வழி தெரியலை..." என்றார்.

"வீட்டுச் சொந்தக்காரர்கள் எல்லோரும் கைப்பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டுவதில்லை. வங்கியில் 14 சதவிகித வட்டியில் கடன் வாங்கித்தான் கட்டுகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 சதவிகித வட்டிதான். இங்கு வங்கி வட்டி விகிதம் அதிகம் இருப்பதும் ஒரு காரணம். வங்கியின் கடனை அடைக்கவே ஐந்து வருடம் முதல் பத்து வருடம்வரை ஆகிறது. இதில் நடுநடுவே வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தி, கட்ட வேண்டிய இன்ஸ்டால்மெண்ட் தொகையையும் அதிகமாக்கிடும். இதுக்கு நடுவே, நாம் ஒரு பட்ஜெட் போட்டு வீட்டைக் கட்ட ஆரம்பிச்சிருப்போம்.  நாளுக்கு நாள் உயரும் சிமெண்ட், கம்பி, மண், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்கள், மின் வசதி, தண்ணீர் வசதிக்கென அலைந்து, அங்கங்கே லஞ்சமாக் கொடுக்கக் கூடிய பெருந்தொகை இதெல்லாம் பட்ஜெட்டைப் பஞ்சராக்கிடும். வீடு கட்டும்போது செங்கல், ஜல்லி எல்லாம் கொட்டும்போது ரோட்டுல கொட்டுறாங்கனு ஒரு கம்ப்ளைண்ட் வரும். அதுக்கு கவுன்சிலர்ல இருந்து கவனிக்க வேண்டியிருக்கு.வெளியில இருந்து யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம். ஒரு ஹவுஸ் ஓனரா ஒரு மாசம் இருந்து பார்த்தீங்கனா, நாங்க படற சிரமத்தை நீங்க புரிஞ்சுக்குவீங்க..." என்கிறார் அயனாவரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்.

புறநகர் புறப்பாடு
நடுத்தர மக்களின் வருமானத்தில் ஏறக்குறைய 35 சதவிகிதம் வீட்டு வாடகைக்கே போய்விடும் நிலையில், வீட்டு வாடகை உயர்ந்து அது சம்பாத்தியத்தில் 40 சதவிகிதமாகி விடுகிறது. இந்த நிலையில் தங்கள் வருமானத்துக்குக் கட்டுப்படியாகும் விதமாக  வாடகை குறைவான வீடுகளைத் தேடி ஓடுகிறார்கள். இவர்களைக் கரம் நீட்டி வரவேற்று ஆறுதல் அளித்து வந்தவை, சென்னைப் புறநகர்ப் பகுதிகள்தான். ஆரம்பத்தில் கிண்டி போன்ற பகுதிகளில் வாடகை குறைவு என்று அங்கே திமுதிமுத்தார்கள். பிறகு கிண்டிக்கும் டிமாண்ட் அதிகரித்து, அங்கும் வாடகை உயர்ந்தது. விழி பிதுங்கிய நடுத்தர வர்க்கம் பிறகு,  தாம்பரத்துக்குப் படையெடுத்தது. இப்பொழுது வாடகை அங்கேயும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இப்போது, சென்னையில் வேலையை வைத்துக்கொண்டு தாம்பரத்தைத் தாண்டி வண்டலூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என்று தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டவர்கள் பலர். இவர்கள் அங்கிருந்து இங்கு பணிக்கு வரவேண்டியிருப்பதால், சாலைப் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துவிட்டது.

"சென்னைக்கு வந்த புதிதில் பதினைந்து வருஷத்துக்கு முன், கோடம்பாக்கத்துல இருந்தேன். ஆரம்பத்தில் வாடகை ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான். படிப்படியாக உயர்ந்து,ஆறு வருஷத்தில் மூவாயிரம் ரூபாயா ஆயிடுச்சி. இனி கட்டுப்படியாகாதுன்னு மீனம்பாக்கத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகைக்குக் குடிவந்தேன். அதுக்கப்புறம் அங்கேயும் வாடகையை அதிகமாக்கினாங்க. பல்லாவரம் போனேன்... அதுக்கப்புறம் இப்ப செங்கல்பட்டுல குடியிருக்கேன். வாடகை மூவாயிரத்து ஐநூறு. தினமும் ரெயில்ல போய் வந்துக்கிட்டிருக்கேன்..." என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாரங்கன்.


ஒய் நாட்?
‘இட  விலையை அரசு கட்டுப்படுத்தாத வரையில் வாடகைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரப்போவதில்லை. இட விலையின் பிரச்சினை, வாடகையில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. ஹோட்டலில் சாப்பிடும் இட்லியில் தொடங்கி, ஒரு பக்கம் டிடிபி டைப் பண்ணுவதுவரை விலையேற்றத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது. தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் கட்டுப்படுத்த முடியாத கறுப்புச் சந்தையாக மாறிவிட்டது. ஓர் இடத்தின் உண்மையாகப் பதியப்படும் மதிப்புக்கும் பணம் கொடுக்கும் மதிப்புக்கும்  மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இது ஊழல் கொழிக்கவும் லஞ்சம் செழிக்கவுமே துணை நிற்கிறது. நான் 97ல் சென்னைக்கு வந்தபோது 2,000 ரூபாய்க்கு வாடகைக்கு இருந்தேன். இன்று அதுவே 10,000 ரூபாய் ஆகியிருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் கறுப்புச் சந்தைகளை ஊக்குவிக்கிறது. பத்திரப்பதிவில்தான் அரசுக்கு அதிக லாபம். எனவே, வீடு வாடகை உயர்வுக்கு ஐடி நிறுவனங்களின் பெருக்கம் என்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது"  என்று அரசே காரணம் எனக் குற்றம் சாட்டிய அமீர் அப்பாஸ் தொடர்ந்து, "சீனா மாதிரியான நாடுகளில் 90 வருஷம் அக்ரிமெண்ட்டுக்கு அரசாங்கமே இலவசமா இடம் கொடுக்குமாம். அங்கே யாரும் இடத்தை விலைக்கு வாங்க முடியாதாம். இங்கே பார்க் செரட்டன், சோழா மாதிரியான ஹோட்டல்ல ஒருநாளைக்கு அறை எடுத்துத் தங்குவதற்கு 25,000ம்னா அங்க அதே மாதிரி ஹோட்டல்ல தங்க, நம்ம ரூபாய் மதிப்புக்கு 2,000ம்தான் ஆகுமாம். எப்படி இது சாத்தியம்னு இதைப் பத்தி சீன நண்பர் ஒருத்தர்ட்ட கேட்டபோது, ‘கட்டுமானச் செலவு மட்டும்தான் அவங்களோடது. அதனால, குறைச்சுக் கொடுக்க முடியுது’னு சொன்னாராம். இது வாய்வழித் தகவல் கிடையாதுங்க. ஆதாரப்பூர்வமான தகவல். இது, நடிகர் ராஜேஷ், ‘நான் கண்ட சீனா’ அப்படிங்கிற புத்தகத்துல எழுதியிருக்கிற குறிப்பு... இங்க 50 லட்சத்துக்குப் பதிவு பண்ற இடத்த, ஒன்றரைக் கோடி கொடுத்து வாங்கிக் கட்டும்போது அதுதான் ஊழலுக்கு ஊத்துக்கண்ணா இருக்கும்"  என்று வெதும்பினார்.


பெட்டி செய்தி: சட்டம் என்ன சொல்கிறது?
"ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.

அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.

இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.

தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.

தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.

வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

வீட்டைக் காலி செய்ய வைக்க
குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டிய  பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.


பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்!
வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு  வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...

ஒப்பந்தம்
முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம்.

ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.

முன்பணம்
வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வாடகை
வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.


                                                                          --- நன்றி புதிய தலைமுறை.....

புகார் செய்வது எப்படி?


காவல் நிலையத்தில் புகார் – குற்ற விசாரணையின் முதல் படி!

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப்புள்ளியாகும். 



சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.

எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.

புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.

புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம். அதை பிறகு பார்ப்போம்)

குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும்.

இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.

தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.

காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.

இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இந்தமுறையை ஏற்றுக் கொள்கிறது.

***

புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடைய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசாரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.

ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில்லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் என்ன செய்வது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

நம் வரலாறு










நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே..... (:-

வியாழன், 1 மார்ச், 2012

குழந்தை தொழிலாளர்கள்


யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர்? எதை நோக்கி இவர்களின் பயணம் சென்றுகொண்டே இருக்கிறது? இவர்கள் தானாகவே வருகிறார்களா? அல்லது யாரேனும் தள்ளி விடுகிறார்களா? இவர்களின் நோக்கம் தான் என்ன?

இந்த படங்களை பார்த்ததும் என் மனதில் பதிலில்லா பல கேள்விகள் எழுந்தன... இந்த சிறுவர்களை பார்க்கும்போது இவர்கள் வேலை பார்த்து இவர்களின் வயிற்றுப்பசியை தீர்க்கிரார்களா? அல்லது மற்றவர்கள் தங்களின் வயிற்றுப்பசிக்காக இவர்களை இந்த பாழுங்கிணற்றில் தள்ளி விடுகிறார்களா?

குழந்தை தொழிலாளர் தடை சட்டம் வந்த பிறகும் கூட இன்னும் குழந்தை தொழிலார்கள் குறைந்தபாடில்லை.... பல இடங்களில் நான் இன்னும் குழந்தைகள் தங்கள் மற்றும் தங்களின் குடும்பத்தின் வயிற்றுப்பசியை தீர்ப்பதற்காக வேலைக்கு செல்வதை நேரில் காண்கையில் மனதிற்குள் ஒரு நெருடல் ஏற்படுகின்றது...

இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும்போது அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது எனக்கு கோபம் வரும்... நான் அவர்களை தட்டி கேட்க வேண்டும் என்று நினைப்பேன்.. ஆனால் நானும் ஒரு சிறுவன் என்பதால் என் மனதில் ஒருவித பயம் இருந்தது, அவர்களை தட்டி கேட்டால் என்னை அடிக்க வந்துவிடுவார்களோ என்ற ஒரு பயம்...

எனவே உங்கள் கண்களில் இதுபோன்ற சிறுவர்கள் தென்பட்டால் உடனே அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்... பின்பு அவர்களின் பெற்றோர்களை பார்த்து பேசி உங்களால் முடிந்த அளவிற்கு அந்த குழந்தை படிப்பதற்கு உதவி செய்யுங்கள்... இல்லையென்றால் அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டு அந்த குழந்தைகளை ஆசிரமத்திற்கு அழைத்து சென்று அங்கு சேர்த்துவிடுங்கள்... அவர்கள் அந்த குழந்தைகளை படிக்க வைப்பார்கள்... உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டு இவர்களை போன்ற பல குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை வரவழையுங்கள்..... நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு ஒரு தகவல் சொல்லுங்கள், இந்த மாதிரி குழந்தைகளை பார்க்கும்போது.....